Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, March 31, 2007

வாழ்க்கை


ஓடி ஆடி
ஆடிப் பாடி
ஓடி ஆடி
ஓடி ஓடி
தேடித் தேடி
ஓடி ஓடி
ஓடோடி
முடியும் முன்பே
அடங்கியது
நாடோடி இயக்கம்

-சுகதேவ்
நன்றி: ‘முத்துக்கமலம்
இணைய இதழ்


Monday, December 18, 2006

கரைந்த உள்ளீடு


காற்றின் முகிழ்ப்பில்
சில்லிட்ட கல்லீரல்
மௌனத்தின் சுவாசிப்பில்
தெறித்த த்வனிகள்

சூல்கொண்ட இருளில்
ஓடிக்களைத்த குதிரைகளாய்
முணுமுணுப்புகளின் பேரொலிகள்

எரிந்த கானத்தில்
சாம்பல் கரங்கள்
குரல்வளை நெரிக்க
தரைதட்டி நின்றன
பாய்மரப் படகுகள்

காலம் கிழித்து
பாலம் உடைத்து
சிதறின ஆடுகள்
நனைந்த ஓநாய்கள்

குறுதிச் சேற்றில்
இரத்தச்சகதி பொங்க
சலனமற்ற நிர்வாணங்களாய்
பெருமூச்சுகளின் ஜ்வலிப்புகள்

பிரளய தரிசனத்தின்
ருத்ர அவதாரத்தில்
காட்சிகள் கலகலக்க
சாட்சிகள் சல்லடைகளாய்...

இரைச்சலில் அடங்கிய
ஒற்றை ஒலியாய்...
கரைச்சலில் உயிர்த்தெழுந்த
கற்றாழையாய்.....

பூமி மீண்டும் குலுங்க
செத்துப் பிழைத்தது மனிதம்
.................................................
கொத்துப் பரோட்டா புனிதம்

பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள்
அன்றி வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....

சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!

பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!

இன்றொரு "கவிதை" செய்ய
இதுவே ஆதி சூத்திரம்
என்கிறார் நண்பர் ஒருவர்
எனது எதிர்வினை கண்டு
பாதி சூத்திரமாகவேனும்
ஏற்க வேண்டுமெனநெருக்குகிறார்...

அவர் ஏகடியம் பேசுகிறார்
எனக்குப் புரிகிறது....

உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்....

புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
...................................................சுகதேவ்

நன்றி: தமிழ்.சிஃபி. இணைய இதழ்